சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரும் மரணம் அடைந்தனர். இதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியை ரத்து செய்து அதற்கு செலவாகும் நிதியை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் வரும் நிதி வருமானம் அனைத்தும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் என சிஎஸ்கே அணி தெரிவித்திருந்தது.
இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். இதையடுத்து இன்று பெங்களூர் அணியும் சிஎஸ்கே அணியும் சென்னையில் முதல் ஐபிஎல் போட்டியை விளையாடி வருகிறது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. போட்டி முடியும் முன்பே அறிவித்தபடி சென்னை அணி நிர்வாகம் தொகையை ஒப்படைத்துவிட்டது. மேலும் ஐபிஎல் தொடக்க விழாவுக்கான செலவுத்தொகை ரூ. 20 கோடியும் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டது.
COMMENTS