தமிழகத்தில் பொதுமுடக்கம் ஜுன் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபடவும், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை நீடிக்கும்.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், பிற வெளியூர்களுக்கும் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்படுகிறது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.
மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவை தொடர்ந்து இயங்காது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உயிரியியல் பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை தொடரும்.
மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிப்பு. என்றாலும், தொற்றின் தன்மைக்கேற்ப கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வு அளிக்கப்படும். இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு மண்டலங்களில் பேருந்துகள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 7 வது மண்டலத்தில் வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் 8 வது மண்டலத்தில் வரும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
பிற மாவட்டங்கள் அடங்கிய மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை. எனினும், வெளி மாநிலங்களுக்கு சென்றுவரவும், மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவும்
மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நோய் கட்டுப்பாடு பகுதி தவிர பிற பகுதிகளில் நாளை முதல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களில் , நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அல்லது அதிகபட்சம் 40 பேருடன் இயங்க அனுமதி.
தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். வணிக வளாகங்கள் தவிர்த்து, நகை கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து ஷோரூம்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஜூன் 8 ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுவதுடன் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் சாப்பிட அனுமதி.
குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக் கூடாது. தேனீர் கடைகள், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும், ஆட்டோக்களில் ஓடுநர் தவிர்த்து 2 பயணிகளும் பயணம் செய்ய அனுமதி. சைக்கிள் ரிக் ஷாக்களுக்கும் அனுமதி.
முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.
சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் ஐ டி நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தலா இரண்டாயிரத்து 500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தி முகாம்களில் தங்க வைக்கப்படும் ஏழை மக்களுக்கு, அவர்கள் வீடு திரும்பும் போது தலா ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும்.
அனைத்து பகுதிகளிலும் நோய் பரவலை தடுக்க ஏதுவாக மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்கள் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடத்தக்கவை.
COMMENTS