பீஜிங், மே 29
சீனா- இந்தியா எல்லையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5- ம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.
இதனால் 2 எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது 2 நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு ராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.
இந்த நிலையில் எல்லை விவகாரம் தொடர்பாக முதல் முறையாக சீனா வாய் திறந்து உள்ளது.
இந்தியா- சீனா எல்லையில் நிலைமை "நிலையானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது" என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமரசம் செய்ய தயார் என டிரம்ப் கூறியதற்கு நேரடியாகக் கருத்துத் தெரிவிக்காமல், நிலைமையைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் தயாராக உள்ளன என்று சீனா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரென் குய்கியாங் கூறும் போது
சீனா- இந்தியா எல்லையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவதற்கு சீனா எல்லைப் படைகள் உறுதிபூண்டுள்ளன.
தற்போது, சீனா -இந்தியா எல்லைப் பகுதிகளின் நிலைமை நிலையானது மற்றும் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தக் கூடியது.
இரு தரப்பினரும் நிறுவப்பட்ட எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தூதரக தொடர்புகள் மூலம் பிரச்சினைகளைத் தொடர்புகொண்டு தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர் என கூறினார்.
COMMENTS