அன்பான இனிய காலை வணக்கம் இன்று(29-7-2020) தினமணி மகளிர்மணி பகுதியில் பொ.ஜெயச்சந்திரன் எடுத்த ஒரு சிறிய பேட்டி வந்துள்ளது படிப்பதற்கு வசதியாக பதிந்துள்ளேன் நன்றி-
கடல் கடந்து இலவச கலை!
நடனக்கலையின் எல்லா அம்சங்களையும் உங்வாங்கிக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி மாசிலன் இவர்இலங்கை தென்மராட்சியில் நாதஸ்வர இசைப்பாரியம் மிக்க பரம்பரையின் 5-வது தலைமுறையான கஸ்தூரி மாசிலன் ஈழத்தின் மூத்த பெருங்கலைஞரான பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் கலாநிதி பஞ்சாபிகேஷனின் பேத்தி(மகளின் மகள்) என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு ஈழத்தில் முதல் முதல் ஜோடி நாதஸ்வரம் வாசித்து புரட்சியை ஏற்படுத்தி ஒரு மரபை தோற்றுவித்தவரும், பல்லவி சுரம் வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே என பலராலும் பாராட்டு பெற்றவருமான பிரபல நாதஸ்வர இசைமேதை சண்முகம்பிள்ளையின் பேத்தியும் (மகனின் மகள்) இலங்கையில் பிறந்து தற்போது பின்லாந்து நாட்டில் வசிக்கிறார். அந்நாட்டில் பரதகலா என்ற நடனக்குழுவின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளராக இருக்கிறார். இவருடைய முக்கிய சிறப்பு என்னவென்றால் எழுத்தாளர், இசைக்கருவி வித்வான், நடனக்கலைஞர் போன்ற பன்முகத்தன்மையும், பலத்தரப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கலைப்பயிற்சிகளையும் வழங்கி வருகிறார் இவரிடம் பேசியதிலிருந்து-
இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி ஒரு பகுதியாகும். அத் தென்மராட்சி பிரதேசத்தில் அமைந்த நகரம் சாவக்கச்சேரி அது தான் எனது சொந்த ஊர். சங்கத் தானை சோலைகள் அதிகம் கொண்ட எனது ஊரில் எப்பவும் ஒரு குளிர்ச்சியை உணரலாம். சாவக்கச்சேரியில் அறிஞர்கள், கவிஞர்கள், கலைத்துறையினர், கைவினையாளர்கள் என எல்லாவிதமான மக்களையும் காணலாம். இங்கு தான் வரலாற்று சிறப்பு பெற்ற வாரிவனநாதபுரம் என்னும் சிவன் கோயில் உள்ளது. அத்தோடு நுணாவில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம், பெருங்குளம் வீரசக்தி விநாயகர் கோயில், மீசாலை சோலை அம்மன் கோயில் எனப்பல சிறப்பு பெற்ற தலங்கள் விளங்குகின்றன.
சாவக்கச்சேரியில் புகழ்பெற்ற பாடசாலையில் ஒன்றான இந்துக்கல்லூரியில் எனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டேன். வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்படும் பரதநாட்டியத்தில் ஆசிரியர் தராதர சித்திபெற்றமையால் பரத கலா வித்தகர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண தேசியக்கல்வியியல் கல்லூரியின் 3ஆண்டு ஆசிரியப் பயிற்சியின் பின்னர் டிப்ளமோ இன் டான்ஸ் என்ற பட்டத்தையும், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேற்படிப்பை படித்து பி.ஏ(ர்ழளெ) பட்டதாரியாகவும் ஆனேன். அத்தோடு நர்த்தனம், பரதநிருத்தம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய நூல்களை வெளியிட்டேன்.
கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலையில் 2004-2008 5வருட காலமும் கொழும்பு இந்துக்கல்லூரியில் 1வருட காலமும் ஆசிரிய பணியை மேற்கொண்டேன். இரு கல்லூரியிலும் பணிபுரியும் காலத்தில் இந்து கலாச்சார அமைச்சினால் கொழும்பு கதிரேச மண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி கலைவிழாவில் நவசக்தி, பொம்மலாட்டம் மற்றும் கிராமிய கலைக்கதம்பம் போன்ற நிகழ்ச்சியை வழங்கியதற்காக பாராட்டுப்பட்டு பணமுடிச்சு கிடைக்கப்பெற்றேன்.
இந்துக்கல்லூரியில் நாட்டிய ஆசிரியராக இருந்த காலத்தில் சக்தி மற்றும் ரூபவாகினி தொலைக்காட்சியில் பல நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியதற்காக பாராட்டுப் பெற்றேன். நாட்டிய நிகழ்வுகளுக்காக 2006ல் இந்துமாமன்றத்தினராலும், 2007ல் கொழும்பு தமிழ்ச்சங்கத்தினராலும் சிறப்பு விருதுகளைப் பெற்றேன்.
கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஆழ்கடலில் ஒரு முத்து என்ற பாராட்டுப் பெற்றேன். 2010ம்ஆண்டுக்குப் பிறகு பின்லாந்து நாட்டில் பினிஷ்மொழியில் கற்பிக்கும் ஒரு ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்தேன். இதன் தொடர்ச்சியாக இந்நாட்டில் பரதகலாமன்றம் என்ற நடனப்பள்ளியை நிறுவி பினிஷ்மொழியில் பரத நாட்டியத்தை கற்பிக்கிறேன்.
இப்பள்ளியில் பின்லாந்து, ரஷ்யா, இந்தியா, இலங்கை மாணவர்கள் பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதையும் தாண்டி என்னுடைய வாழ்க்கையில் இலவசமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அதற்கு தகுந்தாற்போல பரதம், பாடல் போன்றவைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் எண்ணம் தானாகவே தோன்றியது அதனால் யாராவது தனிப்பட்ட முறையில் என்னுடைய குழந்தைகளுக்கு கலையை கற்றுக் கொடுங்கள் என்று சொன்னால் போதும் எந்த நேரமும் பார்க்காமல் அதற்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பேன்.
இதையும் தாண்டி கொழும்பில் அமைந்துள்ள பொன்னம்பலவாணேசுவரர் கோயிலில் இலவசமாக நடன வகுப்புகளை எடுத்தேன். அதோடு அறநெறி பாடசாலைகளிலும் இலவச வகுப்புகள் எடுத்துள்ளேன். அது மட்டுமின்றி என்னுடைய நடன நூல்களை கேட்கும் மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பேன். இலங்கையிலோ அல்லது பின்லாந்திலோ எந்த மாணவர்களிடம் மாதத்தோறும் பணம் கேட்டுப் பெறுவதில்லை அவர்களாக எதாவது கொடுத்தால் அதையும் வாங்கி கோயில் பணிகள் போன்றவற்றுக்கு கொடுத்துக் கொண்டே வருகிறேன். பின்லாந்து நாட்டில் இடம்பெற்ற பல கலாச்சார நிகழ்வில் பின்லாந்து நாட்டு பினிஷ்மக்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டேன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 5-8-2017ம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது பன்னாட்டு மாநாட்டில் எனது நாட்டிய நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம் பெற்று பலரது பாராட்டைப் பெற்றது. மிக முக்கியமாக எங்கள் நடனங்களில் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறோம்.
பார்வையாளர்களின் ரசனையும், சிந்தனைகளையும் மேம்படுத்துவதைக் கலைஞர்களின் கடமையாக நினைக்கிறேன். மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அந்தத்தக் கால கட்டங்களுக்கு ஏற்ப, பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் மாற்றங்களையும் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். வருங்காலத்தில் தாயகத்தில் மட்டுமின்றி புலம்பெயர் தேசத்திலும் எமது கலை வளரவேண்டும் என்பதே என்து விருப்பம். அது மட்டுமின்றி எனது படைப்புகள் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.
பொ.ஜெயச்சந்திரன்
COMMENTS