குறள் 423: ( உண்மை தெரியாமல் நம்பாதீர்கள்...!)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
விளக்கம்...!!!
எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது...? என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்...
ஆம்.!, கருத்துக் கூறுவோர் எவராக இருந்தாலும், அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவோ, மதிப்பின் காரணமாகவோ, புகழ் பெற்றவர், செல்வாக்கு கொண்டவர், உயர்நிலையில் இருப்போர் என்பதற்காகவோ அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்கக் கூடாது...
நெருங்கிய நண்பராயிருப்பவர் ஒருவர், தாழ்ந்த பொருளைக் கூறினும், நட்பு கருதி அதை ஏற்கக் கூடாது...
அதுபோல் பகைவரேயானாலும் சிறப்பான உயர்ந்த பொருளைக் கூறின், அவர்களிடம் உள்ள வெறுப்பால், அதைத் தள்ளி விடாது ஏற்க வேண்டும்...!
சொல்பவர் தரம் நோக்காது உண்மைத் தன்மையை உணர வேண்டும்...!
எத்தகைய செய்தியாக இருந்தாலும், அதனை யார் சொல்லி இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அல்லது இகழ்ந்து தள்ளாமல், அதன் உண்மைப் பொருளை ஆராய்வதே அறிவாகும்...
உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு...!
ஆம் நண்பர்களே...!
நூலறிவாலும் கேள்வியறிவாலும் பெற்றதை நுணுகிப் பார்த்து உண்மையை அல்லது சரியானது எது என்று பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்...!
எவரையும் எல்லாம் அறிந்தவராகக் கருதி அவர் சொல்வனவற்றிற்கெல்லாம் அடிமையாகாமல், அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருள் காண வேண்டும்...!!
-
COMMENTS