சைவ அடியார்கள் தெரிந்துகொள்ளவேண்டிய இலகுலீசர் பாசுபத சைவம் ;
இலகுலீசர் பாசுபத சைவம் ;
இலகுலீசர், லகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், குஜராத்தின் காயாவரோகண் பகுதியில், அந்தணர் குலத்தில் அவதரித்ததாகச்சொல்லப்படுகின்றார், பாசுபதம் புகழ்பெற்ற பிற்காலத்தில், சிவனின் அவதாரமாக மேனிலையாக்கப்பட்ட இவர், சிவசின்னங்களுடன் காட்சி தரும் சிற்பங்கள், தென்னகம் உட்பட, இந்தியாவெங்கணும் வடிக்கப்பெற்றன. இலகுலீசர் எனும் பெயருக்கேற்ப (இலகுடம் சங்கதம்:கோல்,மழு) அவை ஒரு கையில் தண்டாயுதம் தாங்கியவையாக அமைந்தன.
சைவ சமயம் ;
தொன்மங்களும் வரலாறும் ;
மழு ஏந்திய இலகுலீசர், ஏழாம் நூற். சிற்பம். சாளுக்கியர் கலைப்பாணி. மகாகூட சங்கமேசுவரர் கோயில், கர்நாடகம்.
இலிங்க புராணக் கதையொன்று, அவர் யோகநெறியின் தோற்றுவிப்பாளர் என்றும், ஈசனின் 28ஆவது மற்றும் இறுதி அவதாரம் என்றும் சொல்கின்றது. கௌருசியர், கர்க்கர், மித்திரர், குசிகர் எனும் நான்கு சீடர்கள் அவருக்கு அமைந்திருந்ததாகவும், அவர்கள் மகாகாலவனத்தில் "காயாவரோகணேசுவரர்" எனும் இலிங்கத்தைத் தாபித்து வழிபட்டதாக ஸ்காந்தபுராணம் கூறும். வியாசரின் சமகாலத்தில், "நகுலீசன்" எனும் பெயரில் ஈசன் அவதரித்து பாசுபத நெறியைத் தோற்றுவித்தார் எனும் கருத்து, கூர்ம புராணம், வாயு புராணம் என்பவற்றிலும் உண்டு.
சில ஆய்வாளர்கள், இவர் ஆரம்பத்தில் ஒரு ஆசீவகர் என்றும், அப்போது சிதறுண்டு கிடந்த சைவக்கூறுகளை ஒன்றிணைத்து, " பசுபதியின் நெறி" எனப் பொருளுற, பாசுபத நெறியைத் தோற்றுவித்ததாகச் சொல்கின்றனர். ஆசீவகம், வைதிகம், சமணம் என்பவற்றுடன் பௌத்தத்தையும் தத்துவார்த்தத் தளத்தில் எதிர்த்த இலகுலீசர்,மிகப்பழைமையான தாந்திரீகம், சாங்கியம், ஹட யோகம் என்பவற்றை ஒன்றிணைத்து, பாசுபதத்துக்கான மெய்யியற் கோட்பாட்டை வகுத்துக்கொண்டார். இவரை ஈசனின் அவதாரமாக வழிபடும் போக்கு, கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்திருக்கின்றது.
மெய்யியலும் இலகுலீசரும் ;
கன்னடத்து பாதாமிக் குகையில் இலகுலீசர் நான்கு சீடர்களுடன். கி.பி 6அம் நூற்.
இலகுலீச பாசுபதமானது, இருமை - அல்லிருமை (பேதாபேத) இணைந்த சைவ மெய்யியலாகக் கருதப்படுகின்றது. இலகுலீசரால் எழுதப்பட்டதாக நம்பப்படும் பாசுபத சூத்திரம், அதன் உரை நூலான கௌண்டினியரின் பஞ்சார்த்த பாடியம் என்பன 1930இல் கண்டுபிடிக்கப்பட்டன. பாசுபதர்கள் முக்கியமாக யோகத்தைக் கைக்கொண்டவர்கள்.
இலகுலீசரின் பாசுபதக் கோட்பாடானது, காரணம், காரியம், க்லை, விதி, யோகம், துக்காந்தம் (விடுதலை) எனும் ஆறையும் தன் சாதனங்களாகக் குறிப்பிடுகின்றது.
இலகுலீசச் சிற்பங்கள் ;
அரிட்டாபட்டி இலகுலீசர் ஏழாம் நூற்றாண்டு குசாணப் பேரரசனான குவிஷ்கனே (கி.பி 140), அவர்களது நாணயத்திலிருந்த கிரேக்கத் தெய்வங்களை, சிவன் மற்றும் இலகுலீசர் கொண்டு மாற்றியமைத்த முதல் மன்னன் என்று கருதப்படுகின்றான். சந்திரகுப்த மௌரியர் காலத்துக்குப் பின் (கி.பி 4ஆம் நூற்.) இலகுலீசரின் திருவுருவங்கள் பெருமளவு கிடைக்க ஆரம்பிக்கின்றன. அவற்றில், ஒருகையில் தண்டமும் மறுகையில் தோடம்பழமும் ஏந்தி நிற்பவராக அல்லது அமர்ந்தவராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது ஊர்த்துவலிங்கம் (நிமிர்ந்த உறுப்பு) வாழ்க்கையை உத்வேகம் செய்யும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது. எனினும், பதினோராம் நூற்றாண்டின் பின்பேயே இலகுலீச வழிபாடு தென்னகத்தை வந்தடைந்திருக்கின்றது.
கர்நாடகம், குஜராத், சௌராஷ்டிரம் மற்றும் சில கிழக்கிந்தியப் பகுதிகளில் இலகுலீச சிற்பம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. எலிபண்டாக் குகைகளிலும் இலகுலீச சிற்பம் காணப்படுகின்றது.
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி எனும் கிராமத்தில் உள்ள குடைவரைச் சிவன் கோயிலிலும் இலகுலீசரின் சிற்பம் உள்ளது.
அரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்,மதுரை ;
அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந்திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக் கோயில். வாகனத்தைச் சாலையில் தூரத்தே நிறுத்தி விட்டு வயல் வரப்பில் நடந்து வரும்போது தூரத்தே செங்குத்தான பாறைகளைப் பார்த்துக் கொண்டே வந்தால் அதன் பின்னால் பாறைகளைக் குடைந்த வகையில் இக்குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இக்குடைவரையைப் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட்டவில்லையெனினும், இக்குடைவரைக்கோயிலின் அமைப்பைக் கொண்டு இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் குடைவித்த கோயில்தான் என்பதை தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தெளிவான கல்வெட்டுக்கள் இல்லாத போதிலும், இக்கோயிலின் முன்புறத்தில் முற்கால தமிழ் எழுத்துக்களின் சில வரிகள் எழுதப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. கல்வெட்டாகச் செதுக்குவதற்காக எழுதப்பட்டு பின்னர் முழுமைப்படுத்தப்படாமல் போன நிலையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
இந்தக் கோயிலின் சிறப்பு இங்கிருக்கும் லகுலீசர் சிற்பம். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில் பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.
லகுலீசர் கி.பி.2ம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பவுத்தமும், சமணமும் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. லகுலீசர் உருவாக்கிய சைவ சமத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது. சிவபெருமானே லகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. லகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது. நாகைக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம், கச்சிக் காரோஹணம் ஆகிய மூன்றுமே அவை. இறைவனே இறங்கி மானுட வடிவில் வந்து அவதரிப்பதையே காரோஹணம், அதாவது காயமாகிய உடல் கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது.
தமிழகத்தில் சிவலிங்க வழிபாடு பக்தி இயக்கக் காலத்தில் கோயில்களில் விரிவடைந்தமைக்கு பாசுபத கொள்கை அடிப்படையாக அமைந்தது. சைவத்தை அரசியல் மதமாக ஏற்ற பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் சிவ வழிபாட்டினை விரிவாக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிர்மானித்தார்கள். பெரிய கற்கோயில்கள் தொடங்கப்பட்ட காலமாகிய கி.பி 8ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திற்கு முன்னர் குடைவரைக்கோயில்களில் சைவசமயத்தின் குறியீடாகிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்த இடங்களாக அமைந்தன. தமிழக வரலாற்றில் சைவ சமய வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடைவரைக் கோயில்களில் ஒன்றாக இந்த அரிட்டாபட்டி குடைவரைக் கோயில் திகழ்கின்றது.-Sktrajan
COMMENTS