ஏடிஎம் கொள்ளையில் டாக்டர் கைது...! அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு...!
அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், மற்றவர்களின் வங்கி பணத்தை, ஏடிஎம்-களில் இருந்து கடந்த 2 வருடங்களாக கொள்ளையடிக்கப்பட்டு வந்தது அம்பலமாகி உள்ளது. இதனை அடுத்து மருத்துவர் விவேக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பகுதியில் ஏடிஎம் மையத்தில் இருந்து பொதுமக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுவதாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு வந்தது. பொதுமக்களின் பணம் திருடப்படுவதை அடுத்து, இது தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக பணிபுரியும் விவேக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு மருத்துவர் விவேக்கிடம் இருந்து ரூ.4 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் விவேக்கிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், விவேக்கிற்கு உடந்தையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் குறித்து தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து, ராஜேஷ் மற்றும் புதுவை அதிமுக பிரமுகரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு, அவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் சர்வதேச கும்பல் தொடர்பிருப்பதாக தெரிகிறது.
ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்துவதற்கு சென்னையைச் சேர்ந்த ராஜேஸ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், டாக்டர் விவேக்கிற்கு உதவி வந்துள்ளனர்.
இங்கு பெறப்படும் டேட்டாக்கள், சர்வதேச கும்பலிடம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனுப்பப்படும் போலி கார்டுகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அதாவது மற்றவர் கணக்கில் இருந்து ஏடிஎம்-ல் எடுக்கும் பணம் டாக்டர் விவேக் கணக்கிற்கு சென்று விடும். இந்த திருட்டுப்பணத்தில் 30 சதவிகித தொகையை ராஜேசுக்கு கொடுத்து வந்துள்ளார் விவேக். டாக்டர் விவேக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2 வருடங்களாக இந்த கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
புதுச்சேரியில் ஏ.டி.எம்.-களில் நவீன முறையில் பணம் திருடிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விவேக் கைது செய்யப்பட்டுள்ளார்.
COMMENTS