👉 👉 தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்....
சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில், வரும் நாட்களில், வறண்ட வானிலை நிலவும்; பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை காலம், டிச., 31ல் முடிந்தது. எதிர்பார்த்த மழை பெய்யாததால், மழை முடியும் முன், பனிக் காலம் துவங்கியது.
குளிர்:
நவ., முதல், பனி காலம் படிப்படியாக அதிகரித்து, மாநிலம் முழுவதும், குளிர் நடுங்க வைத்து உள்ளது. குறிப்பாக, மாலை, 4:00 மணிக்கு மேல் குளிர் அதிகரித்து, காலை, 8:00 மணி வரை நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான பகுதிகளில், குறைந்த பட்ச சராசரி வெப்பநிலை, 15 டிகிரி செல்ஷியசாக உள்ளது. நீலகிரி மலை பகுதியை ஒட்டிய கிராமங்களில், உறை பனி நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை, 3 முதல், 5 டிகிரி செல்ஷியசாக உள்ளது.
இந்நிலையில், 'வரும் நாட்களில், பகல் வெப்பநிலை அதிகரித்து, குளிரின் அளவு குறையும்' என, வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பகல் நேர வெயிலின் அளவு உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, திருத்தணி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், வேலுார், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில், 30 டிகிரி செல்ஷியசுக்கு மேல், வெயில் பதிவானது.
மூடுபனி:
சென்னையில், 29 டிகிரி செல்ஷியசாக, அதிக பட்ச வெப்பநிலை பதிவானது. வானிலை முன் அறிவிப்பை பொருத்தவரை, 'வரும் நாட்களில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும். மலையோர பகுதிகளில் குளிர்ந்த காற்றும், பனியும் நீடிக்கும். 'அதிகாலையில், சில இடங்களில் உறை பனியும், பல இடங்களில் மூடுபனியும் நிலவும்' என, கூறப்பட்டுள்ளது.
COMMENTS