தெலங்கானாவில் ஒரே கிராமத்தின் 5 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல்
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
படகல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த விவசாயிகள், நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகளின் பிரச்சினைகளை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இப்பகுதிகளில் அதிகமாக மஞ்சள், சோளம் விளைகிறது. ஆனால் அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு தவறி விட்டது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என எம்.பி., எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 5 பேர் போட்டியிட முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த விவசாயிகள் கூறினர்.
COMMENTS